Thursday, May 8, 2014

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்
அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக,
ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழத்தில், ஏழு சட்ட கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், சட்ட பல்கலையில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் பி.காம்., பி.எல்., படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான, 2014 15ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு, நேற்று வெளியானது. பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது: இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, இம்மாதம், 12ம் தேதி, மூன்றாண்டு படிப்புக்கு, 26ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், சென்னை, அம்பேத்கர் சட்டப்பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 6ம் தேதி; மூன்றாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 11ம் தேதி இறுதி நாள். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 13ம் தேதியும், மூன்றாண்டு படிப்பிற்கு, ஜூன் 21ம் தேதியும், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, அடுத்த 10 நாட்களில், கலந்தாய்வு நடக்கும். இந்தாண்டு, ஐந்தாண்டு சட்டப்படிப்பில், 1,052 மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், 1,262 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், 69 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமும், 31 சதவீதம், திறந்த நிலை போட்டியின் மூலமும் நிரப்பப்படுகின்றன.
இந்தாண்டு, ஐந்து புதிய முதுகலை பட்டய படிப்புகள் துவக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment