Saturday, May 24, 2014

செப்டம்பரில் கிராம வங்கித் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் கிராம வங்கி ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.பி.எஸ் (IPPS) என்ற அமைப்பிடம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம வங்கிகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வினை அந்தந்த கிராம வங்கிகளே நடத்திக் கொள்கின்றன.நடப்பாண்டில் எழுத்துத் தேர்வு நடக்கும் உத்தேச தேதிகளை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 6,7, 13, 14, 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.மற்ற மாநிலங்களில், ஆட்களை நிரப்பும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரண்டு கிராம வங்கிகள் உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிடங்களை பல்லவன் கிராம வங்கி நிரப்பியுள்ளது. ஆனால், பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்தவரை, தற்போதுதான் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளது.தெற்கு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பாண்டியன் கிராம வங்கி விரைவில் பணியிட நிரப்புதலுக்கான அறிவிக்கையை வெளியிடும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அடுத்த எழுத்துத் தேர்வே வந்துவிட்டது.

ரயில்வே தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே துறையில் 26 ஆயிரத்து 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியானது. லட்சக்கணக்கானவர்கள் அதற்கு விண்ணப்பமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.பொது அறிவுத்தாளில் அறிவியல் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தத் தேர்வை எழுதப் போகிறவர்கள் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியல் கேள்விகளைப் படித்துக் கொள்ள உதவும்.சொல்லப்போனால், வி.ஏ.ஓ. தேர்வு 14 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பொது அறிவுத்தாளுக்கான தயாரிப்பு, இதற்கும் பெரிய அளவில் உதவியாகவே அமையும்.

தபால்துறைத் தேர்வு

தபால்துறையில் Multi tasking staffபணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஹால் டிக்கெட் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு உள்ள பாடங்களில் இருந்துதான் பொது அறிவுக்கேள்விகள் வரும். குறிப்பாக, அறிவியல் பாடங்களை ஒரு முறை நன்றாக வாசித்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment