Tuesday, May 6, 2014

ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்காக, சி.பி.எஸ்.இ., நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட, நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டன; இதை அடுத்து, 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கான விண்ணப்பம், வரும் 9க்குள் அனுப்ப வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இரண்டு வகை தேர்வு:

மத்திய அரசு பாடத் திட்டத்தை பின்பற்றும், சி.பி.எஸ்.இ., அமைப்பு, பிளஸ் 2 வகுப்புக்குப் பின், ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கத் தேவையான, இணை நுழைவுத் தேர்வை (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்) நடத்துகிறது. தேர்வு, இரண்டு வகையாக நடக்கும். பிரதான (மெயின்) மற்றும் மேம்பட்ட (அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வு என, இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் தான், ஐ.ஐ.டி., போன்ற வற்றில் படிக்க முடியும். ஆண்டுதோறும், பிரதான தேர்வு எழுதுவோரில், 1.5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, மேம்பட்ட தேர்வுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதிலும் தேர்ச்சி பெறுவோர், மேற்பட்ட கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அந்த வகையில், இந்த ஆண்டு, 12.78 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர். அவர்களில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த, பிரமோத் வக்கசர்லா என்ற மாணவர், 360க்கு, 355 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பெற்றார்.

இந்நிலையில், பிழையான கேள்விகள், சில கேட்கப்பட்டிருந்தது குறித்து, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர். அதை சரி செய்யும் பொருட்டு, கூடுதல் மதிப்பெண்களை, குறிப்பிட்ட அந்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்த, அனைத்து மாணவர்களுக்கும் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. அதன்படி, ஆன்-லைன் மூலமாக தேர்வு எழுதியவர்களுக்கு, போனசாக, 12 மதிப்பெண்களும், தேர்வு மையங்களில், நேரடியாக வந்து எழுதியவர்களுக்கு, 4 மதிப்பெண்களும், வழங்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மெயின் நுழைவுத் தேர்வில், ஒவ்வொரு கேள்வியும், நான்கு மதிப்பெண்கள் வரை, தகுதி படைத்தவை. குறிப்பிட்ட கேள்விக்கு, சரியான விடை எழுதினால், முழுமையாக, நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையாக இருந்தால், 1/4 மதிப்பெண் குறைக்கப்படும் என்பது, குறிப்பிடத்தக்கது.

மே 25ல் 'அட்வான்ஸ்டு' தேர்வு:

பிரதான தேர்வில் தேர்ச்சி அடைந்தோர், வரும் 9ம் தேதிக்குள், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வரும், 25ம் தேதி, அடுத்த தேர்வு நடக்க உள்ளது.

No comments:

Post a Comment